சலூனில் வாங்கிய 'பல்பு'
- Sankar Ramiah
- Aug 25, 2020
- 1 min read
இடம்: முடி திருத்தகம்
நாள்: நியாபகம் இல்லை
ஷார்ட்ஸ், டீ-ஷர்ட் சகிதமாக ஸ்டைலா, கெத்தா (நெனப்பு தான பொழப்ப கெடுக்கும்) போய் சலூனில் அமர்ந்தாகிவிட்டது. ஒரு வட மாநில பையன் (நம்ம ஆளுங்களுக்கு தான் நாம வேலை கொடுக்க மாட்டோமே!) எனக்கு முடி வெட்டி விடத்தொடங்கினான். இடையிடையில் ஏதோ பேசிக் கொண்டே பத்து நிமிடங்களுக்குள் வேலையை முடித்தான்.
அவன்: கட்டிங் நல்லா இருக்கா சார்?
நான்: ரொம்ப நல்லா இருக்குப்பா. தாங்க்ஸ்.
அவன்: ஷேவிங் பண்ணனுமா சார்?
நான்: வேண்டாம். ஹேர் வாஷ் மட்டும் பண்ணனும்.
அவன்: ஹேர் கலரிங் பண்ணிக்கிறீங்களா சார்?
இந்த கேள்வில தான் நான் விழுந்துட்டேன். நம்மள பார்த்தா கலரிங் எல்லாம் பண்ற அளவுக்கு யங்-காவும் ஸ்டைலாவும் இருக்கு போல! இந்த எண்ணம் வந்ததுமே மனசுக்குள்ள ஒரு பெருமை பொத்துக் கொண்டு வந்தது. இருந்தாலும் பொங்கிய பெருமையை சிந்தாம அடக்கிகிட்டு கஷ்டப்பட்டு வரவழைச்ச அடக்கத்தோட பதில் சொன்னேன்.
நான்: அதெல்லாம் வேண்டாம் பா. எனக்கு பழக்கமில்ல. நீ ஹேர் வாஷ் மட்டும் பண்ணு.
மைண்ட் வாய்ஸ்ல இவனுக்கு இன்னைக்கு ஹெவியா டிப்ஸ் கொடுக்கணும்னு வேற நெனச்சுகிட்டேன். அப்போ தான் என் நெனைப்புக்கெல்லாம் ஒரே செகண்ட்ல ஆப்பு வச்சான்.
அவன்: இல்ல சார். வெள்ளை முடி நிறைய இருக்கு. அதான் கேட்டேன்.
நான்: (வெடித்து சிதறிய இதயத்துடன்) அடப்பாவி... டை அடிச்சுக்கிறியான்னு தான் அவ்ளோ டீசன்டா கேட்டியா!!???
மனதே இல்லாமல் ஒரு இருபது ரூபாயை அவன் கையில் திணித்துவிட்டு கிளம்பினேன்.


Comments